| கும்மிடிப்பூண்டி: மானாவாரி பயிரான கம்பு சாகுபடியில் புதிதாக அதிவீரிய (ஹைபிரீட்) ரக விதைகளை பயன்படுத்தி, அதிக மகசூல் கிடைத்துள்ளதால், செதில்பாக்கம் சாகுபடியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே உள்ளது செதில்பாக்கம் கிராமம். இங்கு, 250 ஏக்கரில் சீசனுக்கு ஏற்றபடி கம்பு சாகுபடி செய்து வருகின்றனர். மானாவாரி பயிரான கம்பு சாகுபடியால், அதிக செலவு மற்றும் பராமரிப்பு இல்லாததால், ஓரளவுக்கு லாபம் கிடைத்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் வருடா வருடம் கம்பு சாகுபடியை தொடர்ந்து வந்தனர். இந்த ஆண்டு, ஆந்திர மாநிலம் காளஹஸ்தி மற்றும் நாகலாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து புதிய ரக ஹைபிரீட் விதைகளை வாங்கி வந்தனர். ஒன்றரை கிலோ கொண்ட ஒரு பாக்கெட்டை ரூபாய் 180க்கு வாங்கினர்.ஒரு ஏக்கருக்கு ஒரு பாக்கெட் என்ற கணக்கில் விதைகள் தூவப்பட்டன. அதன் பின் 45 நாட்கள் கழித்து களை எடுத்தனர். நூறு நாள் பயிரான கம்பு சாகுபடி, தற்போது 75 நாட்கள் கடந்த நிலையில் செதில்பாக்கம் கிராமத்தில் கம்பு சாகுபடியாளர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பொதுவாக இதர ரக விதைகள் மூலம் ஒரு விதைக்கு ஒரு கதிர் என்ற அளவில் விளைச்சல் இருக்கும். இவ்வருடம் ஹைபிரீட் ரக விதைகள் பயன்படுத்தியதன் மூலம் ஒரு விதைக்கு 6 முதல் 10 கதிர் வரை விளைச்சல் கிடைத்துள்ளது. இதனால் அப்பகுதி கம்பு சாகுபடியில் மகசூல் பல மடங்கு பெருகியுள்ளது. செதில்பாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி தணிகாசலம் கூறியதாவது: வருடம்தோறும் எனக்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தில் ஆடிப் பட்டமாக கம்பு சாகுபடி செய்வது வழக்கம். அறுவடையின் போது ஒரு ஏக்கருக்கு நான்கு மூடை கம்பு கிடைப்பது அரிதாக இருந்தது. ஒரு மூடை என்பது 100 கிலோ. இந்த ஆண்டு ஹைபிரீட் ரக விதைகள் பயன்படுத்தியதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 12 மூட்டை கம்பு கிடைத்துள்ளது. மானாவாரி பயிராக இருந்தாலும் களை எடுத்தல், உரமிடுதல், ஏர் உழுதல், அறுவடை உள்ளிட்ட செலவுகள் போக ஓரளவு லாபம் பார்த்த நாங்கள் இம்முறை அதிக லாபம் பார்த்து வருகிறோம். இவ்வாறு விவசாயி தணிகாசலம் தெரிவித்தார். |